செவ்வாய், 31 மார்ச், 2015

13 - பதினாறு வயதினிலே | 16 Vayathinile - 1977



முன்முடிவுகளற்று ஒரு தொகுப்பை அணுகுவது தான், நிகழ்நின்று பின்னோக்கும் பார்வைக்கான முதல் தேவை. இப்படி ஒரு தொகுப்பை கேட்டாதான என் நினைவடுக்குகளை காலத்தின் கரையில் கரைத்துவிட்டு தான், இவ்வரிகளை எழுதப்புகுந்தேன். இதற்கு முன்பான காலத்து பாடல்கள் ஒரு உரைகல்லாக அமையலாம், அது சார்ந்து நம்/ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை கட்டமைக்கலாம். என்னளவில், 16 வயதினிலே, ராஜாவின் 13வது தமிழ்ப்படம். பாரதிராஜா என்ற புது இயக்குநர், கமல், ரஜினி, ஸ்ரீதேவி என்ற இளமைப்பட்டாளம், கவிதையான தலைப்பு. என்னவிதமான பாடல்கள் என்ற 77ன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எனக்கும் இப்போது, கேட்டுப்பார்போம். :)

16 வயதினிலே, நவ 15, 1977 அன்று வெளியனது. இசைத்தொகுப்பை அதற்கு முன்பே கேட்டவர்கள், அதை திரையில் கண்டடைந்த வியப்பு, சரிநிகராக, முதன்முறை அரங்கில் இப்பட பாடல்களை கேட்டவர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒருசேர கட்டிப்போட்டார் ராஜா. அன்னக்கிளிக்கு அடுத்து, கிராமிய பண்பாட்டு கூறுகள், வாழ்வியல் படிமங்கள் நிறைந்த பாடல்களை வழங்கி, படைப்புவெளியில் நாட்டார் வாழ்வியலின் அதிமுக்கியமான மைல்கல்லை நட்டது இப்படம் மற்றும் பாடல்கள்

இருத்தலியல் நோக்கில், ஒரு படைப்பின், படைப்பாளியின் வெற்றி, தொடர் வெற்றி, அவனது வரலாற்றை கட்டமைக்கிறது. ஒரே படத்திற்காக நினைக்கப்படும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். தொடர்வெற்றிப் படைப்புகளை தந்த கலைஞர்களும்  இருக்கிறார்கள். அனைவரால ஆனதும் தான் இந்த கலைவெளி. வென்றவர்களை விட, வீழ்ந்தவர்கள் அதிகம். பாரதிராஜா, இன்றளவும் போற்றப்படும் இயக்குநர். அவரின் முதல் படைப்பிற்கு ராஜாவின் பங்களிப்பு அசாத்தியமானது. தன் மண்ணின் கதையை மக்களுக்கு சொல்லும் பெருமிதம், அச்சூழலின் ஒலிகளை இசைவெளியில் பதியும் ஆர்வம் என ராஜா ஒரு இணைகோட்டு(parallel) இயக்குநராக இப்படத்தை முன்னெடுத்து நம்மனதில் விதைத்தார், குறிப்பாக சோளம் விதைத்தார்


சோளம் வெதக்கயிலே
Ilayaraja
Gangai Amaran
செந்தூரப்பூவே
S Janaki
Gangai Amaran
செவ்வந்திப்பூமுடிச்ச
S Janaki
Kannadasan
ஆட்டுகுட்டி முட்டயிட்டு
MVD, PSuseela
Kannadasan
மஞ்சகுளிச்சு
S Janaki
Aalangudi Somu
செந்தூரப்பூவே
S Janaki
Gangai Amaran

சோளம் வெதக்கயிலே: 

ராஜா பாடிய முதல் பாடல். கேட்ட நொடி, எங்கோ இருக்கும் கிராமத்து சோளக்காட்டிற்கு நம்மை கடத்துகிறது. சோளம் வெளஞ்சவனுக்கு அந்த கதிர்வாசமும் கூடவே செவிவழி நாசியை கிள்ளும். துவக்கயிசை முடிந்து ராஜா பாட ஆரம்பிக்கும் முன், பறவைகள் சிறகடித்து பறக்க அந்த பறவையின் சிறகடிப்பில் நாமும் பறக்கும் கணம் சோளம் வெதக்கயிலே என ஒரு குரல் ஓங்கி உயர்ந்து ஒலிக்கிறது. பாடகனுக்கான எந்த எத்தனிப்பும், கவனமுமின்றி, உணர்வின்வழி உந்தப்பட்ட நாமெல்லோரும் பாடும் ஒரு கணமெனவே இப்பாடல் அமைகிறது. நாம் கேட்ட அத்தனை பாடல்களும் முதன்முதலில் இந்தக்குரலின் வழிதான் படைக்கப்பட்டது என்பது ஒரு சிலிர்ப்பூட்டும் உண்மை. தந்தனத்தானா  இடையிசை, நாமே பாடுவது போன்ற குரல், அதில் பெருகும் உணர்வுகள், நாட்டார் படிமங்கள்.. இது நமக்கான இசை என நாட்டுப்புற தமிழகம் கண்டுகொண்ட படம். 

செந்தூரப்பூவே: 

அதிகாலைப் பரிதியின் ஒளியில் வெட்கங்கொண்டு மெல்லக் கலையும் பனிமேகத்தின் அசைவை ஒத்த Prelude, மேகத்தினும் மெல்லிய ஈரெட்டு வயதினள், தன் மனவெளியில் திளைக்கும் வகையிலான பாடல். மேகத்தின் அசைவுகளை ஒத்த மனக்காட்சி தான் இயக்குநரின் மனதில் விரிந்திருக்கிம், இப்பாடலை கேட்ட நெடி, அந்த படிமத்தை, நாயகியின் உடைவண்ணத்திலும் ஏற்றி, அவளை ஒரு மேகமெனவே மிதக்க விட்டிருக்கிறார். யாரிவள் தேவதையென மயக்குறும் நாயகி, அவளுடன் போட்டியிடும் கிராமிய அழகியல், அதை காதலும் அணைக்கும் ராஜாவின் இசை. ராஜாவின் பதின்மக்காதலி அவர் மனதில் வந்து போயிருப்பார், இந்தப்பாடலை மனதில் உருவாக்கிய கணம். அவருக்கு நம் நன்றி, அவரால் ஒரு காலத்தை வென்ற பாடல் நமக்கு. J

Musically, Raja progressed from Kuyile Kavikuyile, Kalaipaniyil and he is here. A complete female dream song. More poetic, structurally complete and aesthetically proud. J

புலரும் காலையின் கதிரை தெறிக்கும் கிடார், காற்றின் இசையென குழல், அதை தாலாட்டும் வயலின், இப்படியும் ஒரு இசை சாத்தியாமா எனும் கேள்வி வளர்ந்து பயமுறுத்துகிறது. எத்தனை அடுக்கு? கிடார் strumming பாதியில் ஆரம்பிக்கும் வயலின் அப்புறம் chimes மறுபடி ஊஞ்சலாட்டும் வயலின், பின்பு குழல்.. பின்னே ஒலித்துக்கொண்டே இருக்கும் கிடார், சொற்களால் அதை விவரிக்க முற்படும் என் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்ல, எனக்கு கண்ணீர்தான் மிஞ்சுகிறது, இது மோனநிலையில் கசியும் விழி!
இப்பொழுது தான் காணெளியை பார்க்கிறேன், அந்த தாரத்ததா தாரத்ததா வயலின் ஊஞ்சலாடும் காட்சியுடன் அப்படியே பொருந்துகிறது. அதுதான் ராஜா!! https://www.youtube.com/watch?v=xq2RodtGTY4

மஞ்சக்குளிச்சு: 

 தெற்கின் பண்பாட்டு கூறான ஒரு நிகழ்வை இப்பாடல் பதிவு செய்திருக்கிறது. ஊர் மக்களின் கொண்டாட்டம், பல்வேறு வகையினரான மக்கள், அவர்களின் சிரிப்பு, கொண்டாட்டம், ஆர்பாட்டமான துவக்கயிசை, சானகியம்மாவின் குரல், துணைவரும் கூட்டத்தின் சிரிப்பொலி, செனாய் இசை, வயலின், கிடார், வீணை, உறுமி, இன்னும் பல கருவிகள் கலந்து பலவித எண்ணவோட்டங்களை பாடல்வெளியில் பதியும் இப்பாடல், பெண்களின் சிரிப்பொலியை, சேர்ந்திசையை, இரண்டாம் இடையிசையை ஆரம்பிக்கும் கிடாரை.. முடியவில்லை.. நீங்களே கேட்டு ரசியுங்களேன். https://www.youtube.com/watch?v=6Kl0SHs9hPM



செவ்வந்திப்பூ முடிச்ச: 
இந்த இசைத்தொகுப்பின், படத்தின் வெற்றி இந்தப்பாடல் தான் என்பேன். கிராமத்தின் ஆன்மாவை நமக்கு படம்பிடித்து காட்டுகிறது பாடல். செந்தூரப்பூவே’வில் அவ்வளவு ஆழமான துவக்கயிசையை அமைத்த ராஜா, இங்கு ஒரு பெண் குரலின் ஏஏஏஏ’வை கொண்டு பாடலின் எல்லையை நமக்கு அறிவித்துவிடுகிறார். தன்னான்ன தந்தன்னே தானேன்னே என  ஆணும் ஓய் ஓய் என பெண்களும், மெட்டு பெண்ணுக்கு மாறும்போது ஆண்கள் ஓய் ஓய் எனவும் பாடி, கிராமச் சமநிலையை பாட்டில் நிறுவுகின்றனர். இடையிசை தாளமும், குழலும், கூட்டமாக மக்கள் ஆடிப்பாடும் சூழலுக்கு அப்படியே பொருந்துகிறது. நான் வளர்ந்த பின்பும், அதாவதும் படம் வந்து 10 ஆண்டுகள் கழிந்த பின்பும், திருவிழாக்கள் இந்த பாட்டில்லாமல் களைகட்டாது.  ஆத்துல காத்தடிச்சா அலையோடும் அலையோடும் அலையோடும் கெண்ட வெளையாடும் இப்ப மனசுல துடிக்குதம்மா… சூழலின் துடிப்பு, ஆண் பெண் ஈர்ப்பின் இயங்கியல், கூடவே ஆடும் குழுவின் பங்கு.. இது ஊர்கூடிதேரிழுக்கும் பாடல். ஊரை ஆடவைத்த பாடல். இதில் குழு ஆடும் நடனம் எங்க ஊர் மாரியம்மன் திருவிழாவில் மிகவும் பிரபலம். ஊரை ஏய்க்கும் ஒருவனை அடித்த மகிழ்ச்சியை அந்த ஊரே பகிர்ந்துக்கொள்கிறது, நாயகன் நாயகியுடன். ராஜாவின் மனவோட்டம் அதுதான் என அவதானிக்கிறேன். பாடலே அந்த அறை’யுடன் தான் ஆரம்பிக்கிறது. கமலும் ஸ்ரீதேவியும் சிரிக்கும்போது வரும் பிண்ணனி இசை அருமை, அங்கிருந்து அறை, அப்புறம் பெண் ஏஏஏ என விளிக்கும் குரல்.. என்ன ஒரு பாடல்!!

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு: 


 அங்கதப் பாடல்களை இதற்கு முன்பே ராஜா பதிவு செய்திருந்தாலும், இதுதான் அவ்வகையின் முதிர்ந்த முதல் படைப்பு. கவியரசரின் வரிகள் முரண்பாட்டின் நகைச்சுவையை அழகாக முன்னிறுத்துகிறது. மலேசியா ராஜா’வின் பாடகர்களில் நிரந்தமாக இடம்பிடித்துவிட்டார். சந்தைக்கு போவது, கிராமங்களின் கொண்டாட்டமான ஒரு நிகழ்வு, கொள்முதலும் ஒரு வாரத்துக்கு தேவையான அளவுக்கு தான் வாங்குவோம். கூடை, நார்பை, இதனுள்ளே ஒரு வாரத்திற்கான செலவுகள் அடங்கிவிடும். ஒவ்வொரு வாரமும் செல்வதும் சாத்தியமில்லை. அதற்கொன குழு அமைந்து, விருப்பக்குழுக்களுடன் சந்தைக்கு செல்வோம். நடை, பின்பு சைக்கிள், இப்பொழுதும் சந்தைகள் இருக்கு. ஞாயிறு சந்தை, செவ்வாய் சந்தை, புதன்சந்தை, வெள்ளிசந்தை, பாலக்கோடு பக்கத்தில் வெள்ளிச்சந்தை என்ற ஊரே காரணப்பெயர் கொண்டு நிற்கிறது. 


இதுவரை வந்த ராஜா படங்களின் பாடல்கள் கட்டமைத்த எதிர்பார்ப்பு வெளியை தனது அற்புதமான இசையின் மூலம் நிரப்பி, தமிழ்சினிமா’வின் ஒரு புதிய இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறார் ராஜா. இது ராஜாவின் காலம். ராஜாவின் பதினாறு வயதினிலே.. நம் மண்ணின் இளமை புதுமை என்றும் நிலைத்து நிற்கும் தன்மையது. ராஜா-கமல் இணையின் முதல் படம். பாரதிராஜா-கமல், பாரதிராஜா-ரஜினி- பாரதிராஜா-ஸ்ரீதேவி - முதல்படம். 

முழுப்படச்சுட்டி: https://www.youtube.com/watch?v=njEKoSMcJCI 

7 கருத்துகள்:

  1. /16 வயதினிலே, ராஜா’வின் 14வது தமிழ்ப்படம்./ உங்க வரிசையில் இது 13வது படம்; எதையாவது விட்டுட்டீங்களா? அல்லது வரிசை மாறிட்டீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 13 தான் சரி, பதிவுகளின் வரிசையில், புள்ளியியல் சேர்ந்து அந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. 13என திருத்திவிட்டேன். மொத்தப்பதிவுகள் 15 - அதில் முதல் பதிவு, மற்றும் 1976 புள்ளியியல் தவிர்த்து 13 படங்களை பதிந்திருக்கிறேன். சுட்டியமைக்கு நன்றி. :))

      நீக்கு
  2. நன்றி தோழர்... ராஜாவின் குரலில் வந்த முதல் பாடல் தகவல் அருமை.. தொடரட்டும் இந்த செழுமையான முயற்சி.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ராஜா நம்முடைய ஆன்மாவை வருடும் இசை தரும் இசை கடவுள் ..
    தொடரட்டும் உங்கள் பணி தோழரே !!

    பதிலளிநீக்கு
  4. "அருமையான, நெகிழவைக்கும் உன்னதமானதொரு பதிவு..!! நன்றி.

    பதிலளிநீக்கு